25/Jul/2021 02:54:39
புதுக்கோட்டை ஜூலை: புதுக்கோட்டை மேலப்பட்டி நடுநிலைப் பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ப.மகேஸ்வரனுக்கு கல்விச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
பசுமை வாசல் பவுண்டேஷன் மற்றும் காருண்யா டிரஸ்ட் இணைந்து இணைய வழியில் நடத்திய பன்முக கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில், ஆசிரியர் பிரிவில் பங்கேற்று வெற்றி பெற்றமைக்காக கல்விச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
இவர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்ஸ்பயர் அவார்டு(INSPIRE AWARD), தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு(NMMS) ஆகியவற்றிற்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார். இன்ஸ்பயர் அவார்டு போட்டியில், தொடர்ந்து 10 ஆண்டுகளாக மாணவர்களை மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றிபெற வைத்துள்ளார்.
மாநில அளவில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் வினாடி வினா போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். துளிர் வினாடி வினா போட்டியில் மாநிலத்திலும் முதலிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் .
என் எம் எம் எஸ் என்று அழைக்கப்படும் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் பெற உறுதுணையாக இருந்தார். 2020-21 ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் இணைய வழியில் பயிற்சி அளித்து மாவட்ட அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை வெற்றி பெறச்செய்து பாராட்டுப் பெற்றவர்.
மாவட்டத்தில் நடத்தக்கூடிய அறிவியல் கண்காட்சியில் பலமுறை மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றவர். கணினி வழிக் கல்விக்கான டெக்னோ கிளப் போட்டியில், மேலப்பட்டி மாணவர்களை முதலிடம் பெற வைத்தவர்.மாணவர்கள் பல்வேறு துறைகளில் பரிசுகள் மற்றும் விருதுகளை பெற வழிகாட்டி ஆசிரியராக இருந்து வருகிறார். அறிவியல் பாடத்திற்கு மாவட்ட, மாநில மற்றும் ஒன்றிய கருத்தாளர் ஆகவும் பணியாற்றியுள்ளார்.
ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கு பயிற்சி கட்டக நூல்களை எழுதியுள்ளார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் திறனறித் தேர்வில் மாணவர்களை பங்கேற்கச் செய்து வெற்றி பெற வைத்து விஞ்ஞானிகளுடன் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மாவட்டத்தில் பல்வேறு சாதனைகளை செய்தமைக்காக இவர் பணியாற்றும் மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருது, காமராஜர் விருது, மற்றும் தூய்மை பள்ளிக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பள்ளியைச் சுற்றி பல்வேறு மரக்கன்றுகளை வைத்து பசுமைப் பள்ளி ஆக மாற்றுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார். இந்த சாதனைகளுக்காக பசுமை வாசல் பவுண்டேஷன் மற்றும் காருண்யா டிரஸ்ட் இணைந்து நடத்திய கலைஞர்களுக்கான ஆசிரியர் பிரிவில் கல்விச் செம்மல் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.