27/Oct/2020 12:22:33
புதுக்கோட்டை நகராட்சியில் டெங்கு தடுப்பு பணியாளர்கள் 160 க்கும் மேற்பட்டோர் கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் குறித்த புள்ளிவிவரக் கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும், தற்போது கொரோனா பாதிப்பு குறித்தும் டெங்கு பணியாளர்கள் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று புள்ளிவிவரங்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இந்தப்பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்கி வந்த நகராட்சி நிர்வாகம் தற்போது 160 பணியாளர்களுக்கும் பணி வழங்கவில்லை.
அத்துடன் ஒரு மாத ஊதியத்தையும் நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லையாம்.இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை. இதனால் வெறுத்துப்போன டெங்கு பணியாளர்கள் நகராட்சி ஆணையர் அலுவலக அறையை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, பணியாளர் எஸ் கலா கூறுகையில், டெங்கு பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஒரு மாதம் ஊதியத்தையும், டெங்கு புள்ளிவிவரக்கணக்கெடுக்கும் பணிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்றார். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.