logo
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள   கர்நாடக அரசைக் கண்டித்து  புதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள கர்நாடக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

21/Jul/2021 02:59:03

புதுக்கோட்டை, ஜூலை: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள  கர்நாடக அரசைக் கண்டித்து  புதுக்கோட்டையில்  இந்திய விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசு காவிரி குறுக்கே மேக்கேதாட்டுவில்  புதிய அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசும் அனைத்து கட்சிகளும் விவசாயிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பிரச்னை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஆகியோர் தில்லியிக்கு நேரில் சென்று  மத்திய அமைச்சரை முறையிட்டுள்ளனர். இப்பிரச்னையை சட்டப்படி எதிர்கொள்வோம் என முதல்வர் தில்லியில் செய்தியாளர்களிடம் உறுதிபடத்தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடக அரசு தமிழகத்தில் செயல்படுத்த உள்ள காவிரி வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இரு மாநில உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.  தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கர்நாடக அரசின் தமிழக விவசாயிகள் விரோதப் போக்கைக்கண்டித்து, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, இந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழக பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி  தலைமை வகித்து பேசியதாவது: 

புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், காவிரி- வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்து உள்ள கர்நாடக அரசை கண்டித்தும், வெள்ளப்பெருக்கு காலகட்டத்தில் காவிரி டெல்டா பகுதியில் விவசாய நிலங்கள்  நீரில் மூழ்கி சேதத்தை விளைவிப்பதைத் தடுக்கவும், கடலில்  வீணாகக் கலக்கும்  தண்ணீரை திருப்பி வறட்சி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி- குண்டாறு- இணைப்புத் திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில், காவிரி நீரை கூடுதலாக விவசாயத்திற்கு பயன்படுத்த நிலப்பரப்பை அதிகப்படுத்தும் திட்டம் எதுவும் கிடையாது. ஆனால், கர்நாடக அரசு வேண்டுமென்றே  இந்த திட்டத்தை முடக்கும் விதமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது என்றார் அவர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான குருசாமி , இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி உபரி நீர் குழுவினர் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கர்நாடக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

Top