19/Jul/2021 11:40:32
ஈரோடு, ஜூலை: மொடக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ வி.பி சிவசுப்பிரமணி முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் இல்லத்தில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டு காத்திருந்த நிலையில் கூட்டணிக் கட்சியான பிஜேபிக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்பட்டது. இதில் கூட்டணி கட்சி பிஜேபி வேட்பாளர் சி.சரஸ்வதி கூட்டணிக் கட்சியான அதிமுகவின் ஒத்துழைப்பால் வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார்.
கட்சியில் சில முக்கிய பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், முன்னாள் எம்எல்ஏ வி.பி சிவசுப்பிரமணி கட்சி நிர்வாகிகள் ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் என 200-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, முன்னாள் எம்எல்ஏ வி.பி சிவசுப்பிரமணி கூறியதாவது: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின்பு மொடக்குறிச்சிதொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றார்.
ஆனால் கட்சி நிர்வாகிகள் இடையே புதிய ராஜ்ய சபா எம்பி நியமனம், புதிய மாநில மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்னாள் முதல்வருடன் சுமார் ஒரு மணி நேரம் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனால் மொடக்குறிச்சி தொகுதி அதிமுக கட்சி நிர்வாகிகள் இடையே பரபரப்பு நிலவி வருகிறது