logo
ஈரோடு மாநகர் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தொடக்கம்: வீடு வீடாக சென்று அலுவலர்கள் ஆய்வு

ஈரோடு மாநகர் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தொடக்கம்: வீடு வீடாக சென்று அலுவலர்கள் ஆய்வு

14/Jul/2021 11:30:00

ஈரோடு, ஜூலை: பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலர்கள் கடந்த சில மாதங்களாக கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது தொற்று குறைய தொடங்கி உள்ளதால் மற்ற பணிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். தற்போது பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டனர். 

அதன்படி, ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் கடந்த சில நாட்களாக சாக்கடையை சுத்தப்படுத்தும் பணி, கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து வியாழக்கிழமை முதல் டெங்கு தடுப்பு பணி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருவார்கள். 

 ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. 300 வீட்டுக்கு ஒரு கொசு புழு பணி யாளர் நியமிக்கப்பட்டு அந்த நபர் ஒரு நாளைக்கு 50-க்கு வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்வார். அப்போது வீட்டில் தண்ணீர் தேங்கி உள்ளதா, செப்டிக் டேங்க், சுற்றுப்புற பகுதி தூய்மையாக உள்ளதா என்று பார்வையிடுவார். அப்போது கொசு தங்கும் சூழ்நிலை இருந்தால் அங்கு மருந்து தெளிப்பார். இவராக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 வீடுகள் விதம் ஒரு வாரத்திற்கு 300 வீடுகளை கண்காணிப்பார்.

இது குறித்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர்  மா. இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் தற்போது தொற்று குறைந்து வருவதால் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். பருவமழை காலம் தொடங்க உள்ளதால் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஏற்கெனவே சாக்கடைகள் தூர்வாரப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இன்று முதல் வீடு வீடாக மாநகராட்சி கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சென்று ஆய்வு செய்வார்கள். இவர்களுடன் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் செல்வார்கள். 

முடிந்த அளவுக்கு வீட்டில் தண்ணீர் தேங்கி கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிரட்டை, பழைய டயர்கள், உபயோகிக்காத பொருட்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த இடங்களில் கொசுக்கள் மிக எளிதாக உற்பத்தியாகும். இதுகுறித்து அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது கொசு உற்பத்தியாகும் சூழல் இருக்கும் இடங்களில் மருந்துத் தெளிப்பார்கள். 

மேலும், அரசு சார்பில் தற்போது ஒரு உத்தரவு வந்துள்ளது. அதாவது தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஒவ்வொரு மாநகராட்சி அலுவலர்கள் அதிகாரிகள் பணியாளர்கள் களப்பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் அதிகாரிகள் ஒவ்வொரு வார்டு வாரியாக சென்று கள ஆய்வில் ஈடுபடுவார்கள். 

இதன் மூலம் அந்தந்த பகுதியில் நடந்த வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கட்டிட பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சாலை அமைக்கும் பணி, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், ஆஸ்பத்திரிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய முடிகிறது. ஒரே நேரத்தில் அனைத்து பணிகளையும் நேரடியாகச் சென்று பார்க்க முடியும் என்றார் அவர்.

Top