logo
ஈரோடு மாவட்டத்தில்  2720 பேருக்கு  கோவேக்சின் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் 2720 பேருக்கு கோவேக்சின் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது

14/Jul/2021 11:21:17

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் புதன்கிவமை   2720 பேருக்கு  கோவேக்சின் 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில்  கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் இது வரை 4 லட்சத்து 78 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் இரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். இன்னும் சிலர் இரவிலேயே வந்து இடம் பிடித்து காத்து நிற்கின்றனர்.

இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

 இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கோவி ஷில்டு தடுப்பூசி போடப்பட்டது. வழக்கம்போல் தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் இரவு முதலே குவிய தொடங்கினர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி போடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை  ஈரோடு மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் கோவேக்சின்  2-ஆவது தவணை  செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தபடி  காலை முதலே கோவேக்சின் 2- ஆவது தவணை தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. மொடக்குறிச்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் முகமாக நடந்தது.

 இதையடுத்து, அதிகாலை முதலே சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் வரிசையில் நின்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். ஆனால் டோக்கன் அடிப்படையில் முதலில் வந்த 150 பேருக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதனால் மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபோல் மற்ற மையங்களிலும் டோக்கன் அடிப்படையிலேயே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. 

ஈரோடு மாநகரை பொறுத்தவரை இன்று சூரம்பட்டி, காந்திஜி ரோடு, பெரியசேமூர் ஆகிய பகுதியில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இன்று மட்டும் மாவட்டம் முழுவதும் 2,720 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதைப்போல் இன்று மதியம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

Top