logo
ஈரோடு மாவட்டத்தில்  107 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் 107 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது

14/Jul/2021 02:03:03

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில்  107 இடங்களில் நடைபெற்ற  முகாம்கள் திரளான பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் இது வரை 4 லட்சத்து 78 ஆயிரம் பொது மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் இரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். இன்னும் சிலர் இரவிலேயே வந்து இடம் பிடித்து காத்து நிற்கின்றனர்.

இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 4-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 7, 8 - ஆகிய தேதிகளில் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டாம் டோஸ் மட்டும் பொதுமக்களுக்கு போடப்பட்டது. 


இந்நிலையில் திங்கள்கிழமை ஈரோடு மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பூசி வந்தது. தடுப்பூசிகள் அனைத்தும் பிரித்து அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 111 இடங்களில் பொதுமக்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி செலுதப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்றும் மாவட்டத்திலுள்ள 107 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. 

ஒவ்வொரு மையங்களிலும் டோக்கன் அடிப்படையில் முதலில் வந்த 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. வழக்கம்போல் இரவு முதல் பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் குவியத் தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். இன்று 10 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.ஈரோடு மாநகர் பகுதியில் இன்று 20 இடங்களில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் அதே நேரம் கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் இன்னும் அந்த தடுப்பூசி போடப்படவில்லை.அதேநேரம் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Top