12/Jul/2021 05:37:55
ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் கடந்த 5 மாதங்களாக குடிநீர் வரவில்லை என பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொச்சிக்குட்டை பொன் மேடு பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் புஞ்சைபுளியம்பட்டி திருப்பூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு காரணமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் காரணமாக புஞ்சைபுளியம்பட்டி திருப்பூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.