logo
அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

09/Jul/2021 08:26:09

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு  தகுதியுள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: 2021 -ஆம் ஆண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  இணையதளம் வாயிலாக 28.7.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

 மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கு  www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில்  அரசு தொழிற் பயிற்சி நிலையம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும்; மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

எனவே மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து  அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம் -1) வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

ஜுலை - 2021 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8 -ம் வகுப்பு தேர்ச்சி, 10 -ம் வகுப்பு தேர்ச்சி, மேலும் ஏப்ரல் 2021 -ல் தேர்ச்சி அடைந்த 10 -ம் வகுப்பு மாணவர்கள்  9 -ஆம் வகுப்பு மதிப்பெண்ணை இணைக்க வேண்டும்.

பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.  தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் (Prospectus)  தரப்பட்டுள்ளன. 

விண்ணப்ப கட்டணம் ரூ.50 கிரடிட் கார்டு, டெபிட் கார்டு,  நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம்,        பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750 வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.07.2021 ஆகும். 

மேலும் விபரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மைய கைபேசி எண்களான புதுக்கோட்டை, அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் 04322-221584 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9486311243 என்ற அலைபேசி எண்ணிலோ, விராலிமலை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் 9865447581 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

மேலும்  புதுக்கோட்டை உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்  9443184841 என்ற அலைபேசி எண்ணிலும்,  புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்  04322-222287 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Top