logo
ஈரோடு மாவட்டத்தில் 3950 பேருக்கு  கொரோனா தடுப்பூசி 2-ஆம் தவணை  செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் 3950 பேருக்கு கொரோனா தடுப்பூசி 2-ஆம் தவணை செலுத்தப்பட்டது

08/Jul/2021 11:24:59

ஈரோடு, ஜூலை:  ஈரோடு மாவட்டத்தில் 3950 பேருக்கு  கொரோனா தடுப்பூசி 2-ஆம் தவணை  செலுத்தப்பட்டது.

ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் தற்போது வரை 4 லட்சத்து 58 ஆயிரத்து 253 பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் நள்ளிரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். நள்ளிரவு ஒரு மணி முதல் வரிசையில் இடம் பிடித்து விடுகின்றனர். இன்னும் சிலர் இரவிலேயே வந்து இடம் பிடித்து காத்து நிற்கின்றனர்.

இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 4-ஆம்  தேதி முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில்  புதன்கிழமை கோவிஷில்டு தடுப்பூசி இரண்டாம் டோஸ் மட்டும் 1,600 பேருக்கு செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 17  மையங்களில் கொரோனா தடுப்பூசியான கோவிஷில்டு, கோவேக்சின் 2 -ஆம் டோஸ் மட்டும் பொதுமக்கள் 3, 950 பேருக்கு செலுத்தப்பட்டது.

இதில் 2,400 கோவிஷில்டு, 1,150 கோவேக்சின்  இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் 5 நாட்களாகியும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் இன்னும் பொதுமக்களுக்கு செலுத்தப்படவில்லை.

Top