28/Dec/2020 08:08:10
ஈரோடு, டிச: ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும். டிசம்பர் மாதம் 31 - ஆம் தேதி இரவு முதல் மக்கள் பொது இடங்களில் கூடி புத்தாண்டை உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வரவேற்பார்கள். இன்னும் சிலர் பெரிய ஹோட்டல்களில் நடனமாடி புத்தாண்டை வரவேற்பார்கள்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பன்னீர்செல்வம் பார்க்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டை உச்சமாக வரவேற்பார்கள். இதைப்போல் கேளிக்கை விடுதிகள் ஹோட்டல்கள் போன்றவற்றிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும்.
ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றாகத் திரண்டு புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் கேளிக்கை விடுதிகள் ஹோட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் மதுபான கடைகள் மதுபானக் பார்கள் மூடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பி. தங்கதுரை கூறியதாவது: இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களில் மக்கள் ஒன்று கூட வேண்டாம். தடையை மீறி பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கேளிக்கை விடுதிகள் ஹோட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால் அதை கண் காணிக்க மாவட்டம் முழுவதும் 800- க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப் பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், புத்தாண்டு அன்று சிலர் குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவார்கள் இதை கண் காணிக்க ஆங்காங்கே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். மேலும் கோவில் கள் வழிபாட்டு தலங்கள் போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வருவார்கள் என்றார்.