03/Jul/2021 06:42:10
ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் 113 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் இரவிலேயே வந்து இடம்பிடித்து மக்கள் காத்திருந்தனர்
ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் தற்போது வரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 253 பேருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் நள்ளிரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். நள்ளிரவு ஒரு மணி முதல் வரிசையில் இடம் பிடித்து விடுகின்றனர். இன்னும் சிலர் இரவிலேயே வந்து இடம் பிடித்து காத்து நிற்கின்றனர்.
இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும்
வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில்
சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து
வருகிறது. அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி
சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும்
தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார்
போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை ஈரோடு மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. முன்னதாக வழக்கம்போல்
வெள்ளிக்கிழமை இரவு முதலே தடுப்பூசி போடும்
மையங்களில் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக
முந்தையநாள் இரவில் இருந்தே மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.
மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் டோக்கன் அடிப்படையில் முதலில் வந்த 150 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இன்று மட்டும் மாவட்டம் முழுவதும் 15, 170 கோவிஷில்டு, 1500 கோவேக்சின் என மொத்தம் 16ஆயிரத்து 170 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில் கோவேக்சின் தடுப்பூசி மட்டும் இரண்டாம் டோஸ் பொதுமக்களுக்கு போடப்பட்டது.