logo
கூடுதல் தளர்வுகள் அறிவிப்பால் ஈரோட்டில் அதிகரித்த  போக்குவரத்து: விதிமுறைகளை மீறியதாக ரூ.4 லட்சம் அபராதம்

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பால் ஈரோட்டில் அதிகரித்த போக்குவரத்து: விதிமுறைகளை மீறியதாக ரூ.4 லட்சம் அபராதம்

03/Jul/2021 05:37:39

ஈரோடு, ஜூலை: கூடுதல் தளர்வுகள் அறிவிப்பால் ஈரோட்டில்  அதிகரித்த போக்குவரத்து நெரிசலில்  விதிமுறைகளை மீறியதாக போலீஸார்  ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர். 

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி- சசிமோகன் தெரிவித்திருந்தார்.

கடந்த 28-ஆம் தேதி முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் வாகனங்கள் எண்ணிக்கை பெருகி விட்டது. ஈரோடு மாவட்டம் முழுவதும் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது .  38-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  ஒரு நாளில்  மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 759பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக முக கவசம் அணியாதவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 139 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்வி குறியாகி உள்ளது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 193 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 172 இருசக்கரவாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ரூ.4 லட்சத்து 7 ஆயிரத்து 500 அபராதம்  வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் அனைத்திலும் வழக்கத்தைவிட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இ -பாஸ் பதிவு பெற்று முறையாக அந்த வாகனங்கள் மட்டுமே ஈரோடு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப் பட்டன. 

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு பகுதி, காளைமாடுசிலை, பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் அதிகளவு காணப்படுகிறது. 

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே சிக்னலில் நின்று போக்குவரத்தை சரி செய்தாலும் அதிக வாகன எண்ணிக்கையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

Top