02/Oct/2020 06:09:33
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி காந்திசிலை முன்பு விவசாயிகள் உறுதிமொழி ஏற்பு
புதுக்கோட்டை: விவசாயிகளுக்கு விரோதமான வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் புதுக்கோட்டையில் உள்ள காந்திசிலை முன்பாக வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே காந்தி பூங்காவில் உள்ள காந்திஉருவச் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.சோமையா தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ்.பீமராஜ், எம்.ஜியாவுதீன், வி.சிங்கமுத்து, எஸ்.சுந்தர்ராஜன், சி.அன்புமணவாளன், எம்.என்.ராமச்சந்திரன், கே.சண்முகம், ச.அடைக்கலசாமி, டி.சலோமி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.