30/Sep/2020 11:12:17
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து புதன்கிழமை தீர்ப்பளித்தது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க கோரி அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஈரோடு மாநகர பகுதியான ரயில் நிலையம் பன்னீர்செல்வம் பார்க் பஸ் நிலையம் காவிரி ரயில் பாலம், கோயில்கள் ஆலயங்கள் மக்கள் கூடும் பொது இடங்கள் உள்ளிட்ட பகுதியில் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதைப்போல், மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளான கருங்கல்பாளையம் சோதனை சாவடி, பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, விஜயமங்கலம் சோதனை சாவடி, பண்ணாரி சோதனைச்சாவடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் மாநில எல்லைப் பகுதியில் போலீசார் தீவிரமாக வாகனங்களை கண்காணித்து வருகின்றனர். இது குறித்து எஸ்.பி. தங்கதுரை கூறுகையில், மாவட்டத்தில் தற்காலிகமாக 35 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்