30/Jun/2021 12:49:46
புதுக்கோட்டை, ஜூன்: திமுகவின் பெருந்தன்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வரம்பு மீறி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்படுவதாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி குற்றம்சாட்டினார் .
அறந்தாங்கியில் ரகுபதி செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊடகங்கள் மூலம் தெரிவித்திருக்கிறார்.
ஏதோ அவர்களது ஆட்சியில் அவர்கள் எதிலுமே
தலையிடாதது போல எல்லா வற்றிலும் நியாயமாக
நடந்து கொண்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின்
குறுக்கீடு இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைந்திருக்கிறார்.
இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னதாக சித்துப்பட்டி என்ற இடத்திற்குச்சென்று ஒன்றியக்குழுத்தலைவர், ஒன்றிய குழு உறுப்பினராலும் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தை விஜயபாஸ்கர் மீண்டும் திறந்து வைக்கிறார்.
இதுவே அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் அந்த நெல் கொள்முதல் நிலையத்தை திமுகவினர் திறக்க முயன்றால் வீட்டை விட்டு வெளியே வரவிட்டிருக்க மாட்டார்கள் என்பதுதான் அப்போதிருந்த நிலைமை.
புதுக்கோட்டையில் அரசு விழா என்று அழைப்பார்கள் பேசக்கூடாது என்று சொல்வார்கள் ஒப்புக்கொண்டு கிளம்பினாலும் உடனே கைது செய்து கல்யாண மண்டபத்தில் அடைப்பார்கள். அது போன்ற ஜனநாயகக் கொடுமைகளை நாங்கள் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பதில்லை. இந்த பெருந்தன்மையை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு வரம்பு மீறி விஜயபாஸ்கர் நடந்து கொள்கிறார்.
அது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவைப் பொறுத்தே எல்லாம் நடக்கும். தற்போது அவருக்கு ஏ- கிளாஸ் வசதி கேட்டிருக்கிறார்கள் . தமிழக முதலமைச்சர் ஜனநாயகத்திற்கு மரியாதை கொடுப்பவர். எனவே சட்டப்படி என்ன சலுகைகள் இருக்கிறதோ அதைத்தான் கொடுப்போமே தவிர, விதிகளுக்கு புறம்பாக யாருக்கும் எந்த வித சலுகைகளும் வழங்கப்படமாட்டாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதில், அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ-உதயம்சண்முகம்,மாநில
பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஆர்.சே. கலைமணி, தெற்குமாவட்ட இளைஞர்
அணிஅமைப்பாளர் மணிராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.