04/Jun/2021 04:48:11
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள், முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் நிவாரண உதவிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி வழங்கினார்.
புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில் நகரத்தார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற
கோவிட் தடுப்பூசி மருத்துவ முகாமினை .எஸ்.ரகுபதி வெள்ளிக்கிழமை(4.6.2021)துவக்கி வைத்து பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் போர்க்கால நடவடிக்கையின் காரணமாக கோவிட் நோய் தொற்று குறைந்து வருகிறது.
எனினும் கோவிட் நோய் தொற்றை மேலும் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கோவிட் நோயாளிகள் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்குவதே முதல்வர் ஸ்டாலினின் நோக்கமாகும்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கோவிட் நோயாளிகள் இல்லை என்ற நிலையை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஊராட்சி அளவில் பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டால் மாவட்டத்தை கோவிட் தொற்றில்லாத மாவட்டமாக மாற்ற முடியும்.
பொதுமக்களின் உயிரை காப்பாற்றும் வகையில் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே தடுப்பூசி முகாமை அனைத்து பொதுமக்களும் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக அரசு கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறது. எனவே, கோவிட் தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.
பின்னர் புதுக்கோட்டை நகராட்சி, தொண்டைமான்
நகர் மேல 6-ஆம் வீதி மற்றும் திருவப்பூர் தனியார் திருமண
மண்டபத்தில் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண உதவியாக அரிசி வழங்கினார். மேலும்
கலீப் நகரில் எஸ்டிபிஐ சார்பில் ஆம்புலன்ஸ்
சேவையினையும் துவக்கி வைத்தார்.
பின்னர் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி நகராட்சி ஆகிய இடங்களில் பணிபுரியும் முன்களப் பணியாளர்களுக்கும் கோவிட் நிவாரண பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் அறந்தாங்கி ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கோவிட் நிவாரண உதவிகள் வழங்கினார்.
முன்னதாகபுதுக்கோட்டை மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கோவிட் நிவாரண நிதியாக ரூ.25,000க்கான காசோலையை நிர்வாகிகள் வழங்கினர்.