31/May/2021 08:50:34
சென்னை, மே: அதிகமாக கட்டணம் வசூலிக்கும்
தனியார் மருத்துவமனைகளை அரசின் நிர்வாகக் கட்டுக்குள் கொண்டுவர
வேண்டும் என கருத்து தெரிவித்ததற்காக மக்களவை உறுப்பினர் கே. சுப்பராயன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற
இந்திய மருத்துவச்சங்கத்தின்
கருத்துக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும்,தமிழ்நாடு மாநில துணைச் செயலாளரும், ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் மாநிலத் தலைவரும் ,திருப்பூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் எம்பி , சில நாள்களுக்கு முன்பு ஒரு டிவிட் செய்திருந்தார்.
ஒரு சமூகப் பொறுப்பு மிக்க
மூத்த அரசியல் தலைவர் என்ற முறையிலும், மக்கள் பிரதிநிதி என்ற
முறையிலும் , மக்கள் நலன் சார்ந்து பணம் தின்னிக் கழுகுகளான தனியார்
மருத்துவமனைகளை, தமிழ்நாடு
அரசின் நிர்வாகக் கட்டுக்குள் கொண்டுவந்தால் தான்,
நோய்த் தொற்றின் தீவிர சவாலை வெற்றிகரமாக முறியடித்து, மக்களை காப்பாற்ற முடியும் என, அந்த டிவிட்டில் பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவை கண்டித்தும், கே
சுப்பராயன் இந்த பதிவை திரும்பப் பெற வேண்டும், மன்னிப்புக்
கேட்க வேண்டும் எனவும் , இந்திய மருத்துவச் சங்கம் கடந்த 28.5.2021 அன்று வெளியிட்ட அறிக்கை சில நாளிதழிலும் வெளி
வந்துள்ளது. ஐஎம்ஏ வின் அறிக்கை அதிர்ச்சியையும்,ஆச்சரியத்தையும் அளிக்கிறது.
கே. சுப்பராயான் அவர்களின் கருத்தில்
என்ன தவறு உள்ளது ? அவர் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? கட்டணக்
கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளை ,அரசின் நிர்வாகக் கட்டுக்குள்
கொண்டுவர வேண்டும் என்பது தேசவிரோத குற்றமா? அதுவும் பெரும் தொற்று பரவும் காலத்தில், தொற்றின் தீவிர சவாலைக் கட்டுக்குள் கொண்டு வர இது போன்ற ஆலோசனை கூறியது பெருங் குற்றமா?
தனியார் மருத்துவ மனைகளில் கட்டணக்
கொள்ளை நடைபெறாவிட்டால்
,தமிழக அரசு ஏன் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்
? தமிழக முதல்வர் அவர்களே ஏன்
வேண்டுகோள் விட வேண்டும்? தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர்
ஏன் எச்சரிக்கை விட வேண்டும்?
கொரானா பாதிப்பிற்கு உள்ளான மருத்துவர்களும்,
செவிலியர்களும், மருத்துவப்
பணியாளர்களும் அவர்களது
குடும்பத்தினரும் தனியார்
மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்று
கட்டணம் செலுத்த முடியாமல் சிரமங்களுக்கு உள்ளானதும், கடன் காரர்களாக மாறிவிட்ட
துயரமான நிகழ்வுகளும் இந்திய மருத்துவச் சங்கத்தின்
தலைமைக்கு தெரியாதா? அவர்களின் கட்டணங்களை அரசே
ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்
வைத்து போராடியது உண்டா? இது மிகுந்த வருத்தம்
அளிக்கிறது.
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றவரிடம், மூன்று
நாட்களுக்கு ரூ 6 லட்சம் வசூலித்ததாக ஒரு
சென்னை மருத்துவமனை பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளிதழ் ( 06/05/2021) கூட செய்தி வெளியிட்டுள்ளது. அதே செய்தியில், சென்னை யில் உள்ள தனியார் மருத்துமனைகள்
நோயாளிகளின் இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடுகின்றன, என்ற வேதனையான தகவலும் வெளிவந்தது. மருத்துவச் செலவுக்காக அதிகம் செலவு செய்ததின் காரணமாக நாடு
முழுவதும் பல குடும்பத்தினர் சொத்துக் களையும், நகைகளையும் விற்றுவிட்டனர். இது போன்று ஏராளமான செய்திகள் செய்தித்தாள்களில், தொலைக் காட்சிகளில் வெளிவந்துள்ளன.
கொரோனா சிகிச்சையின் காரணமாகவே ஆயிரக்கணக்கானோர்
வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய கொடுமை வேறு எந்த நாட்டிலும் நடைபெறவில்லை.
தமிழகத்திலும் அதிக
கட்டணம் வசூலித்த காரணத்திற்காக சில மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பல மருத்துவமனைகள் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ்
சிகிச்சை அளிக்க மறுக்கின்றன. கூடுதல் கட்டணமும்
வசூலிக்கின்றன. இதை இந்திய மருத்துவச் சங்கம்
கண்டித்தது உண்டா? நடவடிக்கை எடுத்ததுண்டா?
எனவே இத்தகைய சூழலில், பொதுமக்கள் நலன் கருதி, கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவமனைகளை அரசின் நிர்வாகக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என கே.சுப்பராயன் கூறியதில் என்ன தவறு உள்ளது.
இது போன்ற கருத்தை தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும்
வெளியிட்டுள்ளன. தனியார்
மருத்துவமனைகளை அரசுடைமையாக்க
வேண்டும் என்ற கருத்துக் கூட உலக அளவில் மேலோங்கியுள்ளது. தமிழகத்திலும் பலரால் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் இத்தைகய கருத்துகளை
வெளியிட உரிமை உள்ளது.
அதிக கட்டண வசூல் பற்றி கருத்து வெளியிட்டதற்காக, கே.சுப்பராயன் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆர்ப்பரிக்கும் இந்திய மருத்துவச் சங்கத்தின்
தலைமை, கட்டணக் கொள்ளை பற்றி கண்டனங்களை வெளியிட்ட, நீதிமன்றங்களையும், ஊடகங்களையும் மன்னிப்புக் கோர
வேண்டும் என வலியுறுத்துமா? இந்நிலையில் கே.சுப்பராயன் எம்பி
அவர்கள் மட்டும், ஏன் மன்னிப்புக் கேட்க
வேண்டும்?
அவரை மட்டும் குறி வைப்பதின் உள் நோக்கம் என்ன? ஒரு மக்கள் பிரதிநிதி, மக்களுக்காக
பேசுவதில் என்ன தவறு உள்ளது?
கே.சுப்பராயன் எம்பி அவர்களின் கருத்தையும் இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைமை திரிக்கிறது. இது என்ன நேர்மை? சுப்பராயன் பணம் தின்னி கழுகு என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அதை ஐ எம் ஏ- பிணம் தின்னி கழுகு என அவர் கூறியதாக திரித்துள்ளது. பணம் , பிணம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு கூட ஐஎம்ஏ தலைமைக்கு தெரியாதா?
அது மட்டுமின்றி, கே.சுப்பராயன், பணம் தின்னும் கழுகுகளான தனியார் மருத்துவமனைகளை என்று குறிப்பிட்டது கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவ மனைகளை மட்டும் தானே தவிர, ஒட்டு மொத்த மருத்துவ மனைகளையும் அல்ல. இதையும் இந்திய மருத்துவச் சங்கம் திரித்துக் கூறுவது வருத்தம் அளிக்கிறது.
ஒரு சிலர் செய்யும் தவறுக்காக , மருத்துப் பணியில் ஈடுபட்டுள்ளோர் (Medical Professionals) அனைவரையும் , கொள்ளையடிப்பதாக (robbing ) சுப்பராயன் கூறியதாக ஐஎம்ஏ யின் சில தலைவர்கள் கற்பனையான கருத்தை தெரிவித்துள்ளனர்.
சுப்பராயன் கட்டணத்தை அதிகமாக வசூல் செய்யும் தனியார் மருத்துவனைகளை அரசின் நிர்வாகக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளாரே தவிர, மருத்துவப் பணியில் ஈடு பட்டுள்ள அனைவரும் கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூறவில்லை.
சுப்பராயன் அவர்களது கூற்றை திரிப்பது சரியா? இது என்ன நேர்மை ? இது என்ன நியாயம்? ஒரு மக்கள் பிரதிநிதி கூறாத கருத்தை கூறியதாக , பாரம்பரியமிக்க, இந்திய மருத்துவச் சங்கத்தின்
தலைமை
தவறாக பரப்புவது சரியா?
ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த மருத்துவமனைகளையும் குறை சொல்லலாமா? என்பது போன்ற கருத்தும் ஐஎம்ஏ தலைமையால் எழுப்பப் படுகிறது. ஒட்டு மொத்த மருத்துவமனைகளையும் சுப்பராயன் குற்றம் சாட்டவில்லை. சுப்பராயன் கூறியதாக கூறும் இக்கருத்தும் தவறானதே.
ஒரு சிலர் செய்யும் தவறுக்காக
ஒட்டு மொத்த Medical fraternity -ஐ
யும் குற்றம் சாட்டக் கூடாது என ஐஎம்ஏ மருத்துவமனை போர்டு
கூறுகிறது. அந்த தவறிழைத்த ஒரு சிலர் யார், அவர்கள் மீது
ஐஎம்ஏ எடுத்த நடவடிக்கை என்ன என்ற விவரங்களை மக்களுக்கு ஐஎம்ஏ தெரியப்படுத்துமா? லாப நோக்கின்றி எந்த
முதலாளியும் எந்த தொழிலிலும் ஈடுபட மாட்டார். இது தனியார் மருத்துவ
மனைகளுக்கும் பொருந்தும். தனியார் மருத்துவமனைகளும் லாபத்திற்காகவே செயல்படுகின்றன.
இது உலகு அறிந்த உண்மை.
மருத்துவம் கார்ப்பரேட்மயமாகிவரும் காலம் கட்டத்தில், சிறு மருத்துவ மனைகளை , மருத்துவ நிறுவனங்களை
காப்பதற்காகவும், அரசு
மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்களின் உரிமைகளுக்
காகவும், பணிநிரந்தரத்திற்காகவும்,
மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர் கே.சுப்பராயன். இக் கோரிக்கைகளுக்காக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் நடத்தியுள்ள பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
அரசு மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நடத்திய போராட்டத்திற்கும் நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில்
இட ஒதுக்கீடு வழங்குதல், நீட்டிலிருந்து விலக்கு பெறுதல், அகில
இந்தியத் தொகுப்பில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு
இட ஒதுக்கீடு பெறுதல் போன்ற கோரிக்கைகளை தமிழக மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும், மத்திய
அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனை தில்லியில் நேரில்
சந்தித்து முன்வைக்க உதவியவர்.கூடவே இருந்து அக்கோரிக்கைகளை வலியுறுத்தியவர்
சுப்பராயன்.
மருத்துவர்களுக்கும்,
மக்களுக்கும் எதிரான தேசிய மருத்துவ ஆணையச்
சட்டத்தை கொண்டுவரக் கூடாது என மக்களவை யில் முழங்கியவர் சுப்பராயன். தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பொதுத்துறை
நிறுவனங்கள் மூடப்பட்டதை எதிர்த் தும்,அவற்றில் மீண்டும் உற்பத்தியை தொடங்க
வேண்டும் என வலியுறுத்தியும் பலப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்
கே.சுப்பராயன்.
மோடி அரசுக்கு ஆதரவாக மக்கள் நலனுக்கு எதிராக கொரோனா குறித்த விவரங்களையும், மரணங்களையும் பொதுமக்க ளுக்கு
வெளிப்படையாகத் தெரிவிக்க
வேண்டாம்
என மத்திய அரசுக்கு எழுத்துப் பூர்வமாக
இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைமை வேண்டு கோள் விடுத்தது. உலகில்
எந்த நாட்டின் மருத்துவச் சங்கமும் செய்யத் துணியாத செயலை செய்ததற் காக இந்திய மருத்துவச் சங்கம் இந்திய மக்களிடம் மன்னிப்பு தெரிவிக்குமா?
வெளிப்படைத் தன்மை வேண்டாம் எனக்
கூறி ,நாட்டு மக்களுக்கும், ஒட்டு மொத்த மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் துரோகம் இழைத்ததே , அதற்காக
மன்னிப்பு தெரிவிக்குமா? வெளிப்படைத் தன்மை வேண்டாம் எனக் கோரி, கொரோனா தடுப்புப் பணிக்கே குந்தகம்
விளை வித்ததற்காகா மன்னிப்பு தெரிவிக்குமா?
வெளிப்படைத் தன்மை வேண்டாம் என
இந்திய மருத்துவச் சங்கம் கோரியதை பயன்படுத்திக்
கொண்டு,
கொரோனாவால் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கையையே மோடி அரசு நாடாளுமன்றத்தில்
குறைத்துக் காட்டியதே. அந்த தவறுக்காக , கொரோனாவால்
இன்னுயிரை ஈந்த மருத்துவர்களின் குடும்பங்களிடம் இந்திய மருத்துவச் சங்கம் மன்னிப்பை தெரிவிக்குமா ?
சங்கத்திற்கு நிதி திரட்டுதல் என்ற பெயரில், கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ,கார்ப்பரேட் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும், பெயின்டு,பல்பு, ஓட்ஸ் , பழச்சாறு போன்றவற்றிற்கு மருத்துவ நெறிமுறைகளை (Medical Ethics) மீறி நற்சான்றிதழ் (Endorsement) வழங்கியமைக்காக நாட்டு மக்களிடம், இந்திய மருத்துவச் சங்கம் மன்னிப்பு கேட்குமா ?
கே. சுப்பராயன் மட்டுமல்ல அவர் சார்ந்திருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட, இந்திய மக்கள் அனைவரும் மருத்துவர்களின் , மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும், போற்றுகின்றனர். பாராட்டு கின்றனர்.
ஆனால் ,அதே சமயம் கொரோனா தடுப்புப் பணியில் இன்னுயிரை ஈந்த மருத்துவர்களின் தியாகத்தை கேடயமாக பயன் படுத்திக் கொண்டு , தனியார் மருத்துவமனைகளின் முதலாளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. கட்டணக் கொள்ளைக்கு ஐஎம்ஏ தலைமை துணை போகக்கூடாது என அந்த அறிக்கையில் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.