06/Feb/2021 11:10:58
ஈரோடு, பிப்: தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளுக்கு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பவானி ஆற்றங்கரையோரத்தில் உள்ள தேக்கம்பட்டியில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த முகாமில் தமிழகத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்று புத்துணர்வைப் பெறுகின்றன. அதன்படி இந்தாண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் வரும் 8-ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி மார்ச் மாதம் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் பணியாற்ற ஹிந்து சமய அறநிலையத் துறை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் ஊழியர்கள் கொரோனா பரிசோதனை சான்றுகளுடன் செல்ல வேண்டும் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இருந்து 20 கோயில் செயல் அலுவலர்கள், 30 பணியாளர்கள் என மொத்தம் 50 பேர் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் இன்று மாலை கிளம்பிச் செல்கின்றனர்.