28/May/2021 06:15:52
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை சித்தா மருத்துவ கோவிட் சிகிச்சை மையத்தில் லிங்கமுத்திரை, சுயவர்ம பயிற்சி மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். உம்மல் கதிஜா தெரிவித்த தகவல்: தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை
அமைச்சர் ஆகியோரின் ஆணைப்படியும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் எஸ்.கணேஷ் ஆலோசனையின்படியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி வழிகாட்டுதலின் படி புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் கோவிட்-19 சித்தா மருத்துவ சிறப்பு
சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் குறி குணங்களுக்கு ஏற்ப உள் மருந்துகளாக சித்த மருந்துகளும் மேலும் புற மருத்துவமாக ஆவி பிடித்தல் மூச்சுப்பயிற்சி லிங்கமுத்திரை பயிற்சி, சுயவர்ம பயிற்சி மூலம் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயாளிகள் மன அழுத்தம் இல்லாமல் பாரம்பரிய உணவு வகைகளுடன் சிகிச்சை பெற்று விரைவில் குணமடைகின்றனர். பணி மருத்துவர்களான சரவணன், வித்யா, பத்மாவதி ஆகியோர் மற்றும் நோடல் அதிகாரி மருத்துவர் ஏ. மாமுண்டியின் மேற்பார்வையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.