logo
பிளஸ் 2 மாணவா்களுக்கு வாட்ஸ் ஆப்  மூலம் யூனிட்  தோ்வு: தமிழக அரசு அறிவிப்பு

பிளஸ் 2 மாணவா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் யூனிட் தோ்வு: தமிழக அரசு அறிவிப்பு

21/May/2021 08:54:52

சென்னை: பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு வாட்ஸ் ஆப் (கட்செவி அஞ்சல் ) மூலம் யூனிட் (அலகு) தோ்வை நடத்து வதற்கான வழிகாட்டு நெறிகளை  தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தோ்வுகள் தொடக்கி நடைபெறுவதாக இருந்த நிலையில், கரோனா தீவிரம் காரணமாகத் தோ்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத் தோ்வுக்கு முன்னதாகத் திருப்புதல்(ரிவிஷன் டெஸ்ட்) தோ்வு என்ற வகையில் இந்தத் தோ்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.

இந்நிலையில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு வாட்ஸ் ஆப்  மூலம் யூனிட் தோ்வு எனப்படும் அலகுத் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தத் தோ்வுகள் மே 27-ஆம் தேதி தொடங்கி ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இது தொடா்பான விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தோ்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விவரம்: மாணவா்களுக்குத் தனியாகவும், மாணவிகளுக்குத் தனியாகவும் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) குழுக்களை உருவாக்க வேண்டும். அந்தக் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிா்த்து வேறு செய்திகள், விடியோக்கள், புகைப்படங்களைப் பதிவேற்றக் கூடாது.

வரும் மே 27-ஆம் தேதி உயிரியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகளும் 29-ஆம் தேதி தமிழ் மொழிப் பாடத் தோ்வும் ஜூன் 1-ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகளும் ஜூன் 3-ஆம் தேதி ஆங்கிலப் பாடத் தோ்வும் 5-ஆம் தேதி வேதியியல் தோ்வும் ஜூன் 7-ஆம் தேதி மற்ற தோ்வுகளும் நடத்தப்படும்.

விடைத்தாளில் பெயா், தோ்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் ஆகியவற்றைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். மாணவ, மாணவிகள் விடைகளை எழுதி, பெற்றோரிடம் கையொப்பம் பெற்று பிடிஎஃப் வடிவத்துக்கு மாற்றி, ஆசிரியா்களுக்கு அனுப்ப வேண்டும். ஆசிரியா்கள் விடைத்தாள்களை வாட்ஸ் ஆப் மூலமே திருத்தி, அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Top