08/May/2021 10:45:50
புதுக்கோட்டை, மே: வேளாண்பணிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 9942211044 மற்றும் 7299935543 எண்களில் விவசாயிகள் தாங்கள் விரும்பும் நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய விவசாயிகளுக்கான தகவல் சேவை மைய விழிப்புணர்வு கூட்டம் புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி
நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் பேசுகையில், விவசாயிகளுக்கு பல்வேறு தகவல்கள் மற்றும்
ஆலோசனைகள் தேவைப்படுகின்றன.
இந்த விவரங்களை விவசாயிகள் வீட்டிலிருந்தவாறே பெறுவதற்கு வசதியாக விவசாயிகள்
தகவல் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் விவசாய வல்லுநர்கள் மற்றும் அலுவலர்களிடமிருந்து தரமான விதைகள் கிடைக்குமிடங்கள், பூச்சி, நோய் மற்றும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை போன்ற பிரச்னைகளுக்கான தீர்வுகள், வானிலை முன்னறிவிப்பு, அரசு நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் போன்ற விவரங்களை தகவல் சேவை மையத்தின்உதவி எண்கள் 9942211044 மற்றும் 7299935543 ஆகியவற்றில் தாங்கள் விரும்பும் நேரத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
விவசாயிகளுக்கு தேவைப்படும் தகவல்களை துள்ளியமாக வழங்குவதற்காக வேளாண்மை வல்லுநர்கள் மற்றும் விவசாய அலுவலர்கள் உள்ளிட்ட 10 நபர்களைக் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தகவல் சேவை மையம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்பெற செய்வதற்கான முயற்சிகளில் களப்பணியாளர்கள், முன்னோடி விவசாயிகள், கிராம அறிவு மையப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சேவை மையத்தின் தகவல்கள் விவசாயிகளின் விளைச்சலையும், வருமானத்தையும் அதிகரிக்க உதவியாக அமையும் என்றார் ஆர். ராஜ்குமார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.வீரமுத்து பேசுகையில் இந்த தகவல் சேவை மையத்தில் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுவதற்கான முயற்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈடுபடும் என குறிப்பிட்டார். களப்பணியாளர் விமலா வரவேற்றார். ஆர்.வினோத்கண்ணா நன்றி கூறினார்.