26/Apr/2021 06:30:55
ஈரோடு, ஏப்:கொரோனா பரவல் அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு திருப்பிச் செல்லும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஈரோடு மாவட்டத்தில் தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் தீவிரமடைந்த போது வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு ரயில் ,பஸ், லாரிகளிலும் கால்நடையாகவும் சென்றனர்.பின்னர் இயல்பு நிலை திரும்பியது. மீண்டும் வேலை செய்யும் இடத்திற்கு திரும்பி வந்தனர்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான
வடமாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கி பல்வேறு பணிகளில்
ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக பெருந்துறை சிப்காட்
பகுதி, சென்னிமலை, ஈரோடு மாநகர் பகுதியில் அதிக அளவில் வசித்து வேலை பார்த்து வருகின்றனர்.
கட்டிடத் தொழில், சாய, தோல் தொழிற்சாலை,தீவன
தொழிற்சாலை,
பெரிய பெரிய நிறுவனங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை
பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி
வருகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் ஊரடங்கு ஏற்பட்டு
விடுமோ என்ற அச்சத்தால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈரோடு மாவட்டம் முழுவதும்
பல்வேறு இடங்களில் தங்கி பணிபுரிந்து வரும்
வட மாநில தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன்
சொந்த ஊர் செல்வதற்காக ஈரோடு ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என்ற
போதும் நடந்தே வந்து ரயில் நிலையத்தில் தங்கி சிறப்பு ரயில்கள்
சென்றனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் இயக்கம், செயல்பாடு முடங்கும்
அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறியதாவது: வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். கடந்த ஆண்டு அவர்கள் சொந்த ஊர் சென்றதால் தொழில் பெரிதும் பாதித்தது. உற்பத்தி செயலாக்கத்தில் பல்வேறு பின்னடைவு ஏற்பட்டது.
தற்போது மீண்டும் கொரோனா இரண்டாவது அலையைத் காரணம் காட்டி சொந்த ஊர் செல்வது அதிகரித்துள்ளது. இவர்களில் பலர் வேலை செய்யும் இடங்களில் முன்பணம் வாங்கி உள்ளனர். இதை செலுத்துவதை தவிர்க்க கொரோனாவை காரணம் காட்டி பலர் சொந்த ஊர் திரும்புகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் ஈரோடு மாவட்டத்தில் தொழில்கள் செயல்பாடும் அதன் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்தனர்.