logo
உணவே மருந்து... மருத்துவ குணமுள்ள  நெல்லிக்காய்..

உணவே மருந்து... மருத்துவ குணமுள்ள நெல்லிக்காய்..

13/Apr/2021 09:51:39

உப்பு சுவை வரிசையில் உள்ள நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை களையும் கொண்டது. குளிர்ச்சித் தன்மை கொண்டது. கண்களுக்குக் குளிர்ச்சி தரும், செரிமானத்தைக் தூண்டும்,சிறுநீர் பெருக்கும், குடல் வாயுவை அகற்றும், பேதியைத் தூண்டும், உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். 

நெல்லி வேர், நரம்புகளைச் சுருக்கும். வாந்தி, அருசி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும். நெல்லிக்காய் வற்றல், குளிர்ச்சி தரும். இருமல், சளி போன்றவற்றைக் குறைக்கும். உடலைப் பலப்படுத்தும். நெல்லிக்காய் தைலம் நாட்டு மருந்துக் கடைகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகின்றது. இதனைத் தலையில் தேய்த்துத் தலைமுழுகிவர கண்கள் பிரகாசமாக இருக்கும்; பொடுகு கட்டுப்படுவதுடன், முடி உதிர்தலும் தடுக்கப்படும்.

பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின்- சி நிறைந்தது. கொரோனா காலகட்டத்தில் தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும் அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.  நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் ஆய்விலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும் என்று தெரிய வந்துள்ளது.

அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத் தலாம்.நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும்.நீங்கள் மலச்சிக்கல் பிரச்னையால் அவஸ்தைப்படுபவராயின், நெல்லிக்காய் சாப்பிட்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.

நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் நெல்லிக்காய் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும். அதிலும் நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினாவை பாதுகாக்கும். இதில் வைட்டமின்- சி வளமாக இருப்பதால், பார்வை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை தடுக்கப்படும்.

நெல்லிக்காய் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால், அவற்றைத் தடுத்து, இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். எனவே நீரிழிவு நோயாளிகள் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வருவது நல்லது. இது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.

நெல்லிக்காய் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரல் பாதிக்கப் படுவதைத் தடுக்கும். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் கல்லீரல் பிரச்னைகளுக்கு நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லிக்காய் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், புதிய இரத்த செல்கள் உருவாகி, மறைமுகமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும். ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி-யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்ட நெல்லிக்காய், சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

ஆனால், இவ்வளவு நன்மைகளை கொண்ட நெல்லிக்காயை இரவில் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால், புத்தி, வீரியம், தேஜஸ் குறைந்து விடும். எனவே நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் நெல்லிக்காய்யை  நாம் அளவுடன் முறையாக உட்கொண்டு  நமது ஆரோக்கியத்தை காப்போம். தொகுப்பு: சங்கரமூர்த்தி- 7373141119.

Top