logo
ஈரோடு பெரியமாரியம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்ட பக்தர்கள்

ஈரோடு பெரியமாரியம்மன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்ட பக்தர்கள்

11/Apr/2021 09:34:37

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். 


ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் வகையறா கோயில்களில் நடப்பாண்டுக்கான திருவிழா கடந்த 6-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 7-ஆம் தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் கம்பம் நடப்பட்டன. அதைத்தொடர்ந்து பக்தர்கள் தினமும் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வந்தனர். கடந்த 8-ஆம் தேதி காலையில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலில் குண்டம் விழாவும், சின்ன மாரியம்மன் கோயிலில் தேரோட்டமும் எளிமையாக நடந்தது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதையொட்டி திருவிழா நடத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இதனால், கம்பங்களுக்கு புனித நீர் ஊற்ற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அம்மனை மட்டும் பக்தர்கள் வழிபட்டு செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில்,  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். அதேசமயம் ஆகமவிதிபடி கம்பத்தில் ஈரப்பதம் இருக்கும் வகையில், அவ்வப்போது பூசாரிகள் கம்பத்துக்கு புனிதநீரும், பாலும் ஊற்றினார்கள். 


மேலும், பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பூ, தேங்காய், பழம் போன்ற பூஜை பொருட்களை கோவிலில் பக்தர்கள் வழங்கக்கூடாது, கோவில் வளாகம்  மற்றும் கோவிலின் முன்பு பக்தர்கள் கூடி நிற்கக்கூடாது போன்ற விழிப்புணர்வுகள் ஒலி பெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது. அதிக பக்தர்கள் தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவிலின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்கள் மதியம் 3 மணியளவில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு, கம்பங்களை பூசாரிகள் தோளில் சுமந்து முக்கிய வீதி வழியாக வந்து மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும் சேர்ந்து, மாநகரில் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காரைவாய்க்காலில் விடப்படும். 

இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால், நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மதியம் 3 மணிக்கு நடைபெறும் கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி, (ஏப்12)  திங்கள்கிழமை அதிகாலை 5.05 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோயில்களில் இருந்து எடுக்கப்படும் கம்பங்கள் தனித்தனி சரக்கு ஆட்டோக்களில் ஏற்றி மணிக்கூண்டு பகுதிக்கு கொண்டு வரப்படும். 

அங்கிருந்து ஒரு லாரியில் 3 கம்பங்களுக்கும் ஏற்றப்பட்டு ஆர்.கே.வி.ரோடு, காவிரிரோடு வழியாக கருங்கல்பாளையம் காவிரிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காவிரி ஆற்றில் விடப்படுகிறது. இதில் பூசாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.




Top