09/Apr/2021 06:36:57
ஈரோடு, ஏப்: ஈரோடு மாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா கோயிலில் குண்டம் திருவிழாவில் கொரோனா தொற்று காரணமாக பூசாரிகள் மட்டும் அக்னிகுண்டத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில் களாக சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் குண்டம் தேர்த்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கோயில் திருவிழா நடைபெறவில் லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதைப் போன்று இந்த ஆண்டும் கோவில் திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் குண்டம் மற்றும் தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் இரவு பூச்சாற்றுதலுடன் குண்டம் தேர் திருவிழா தொடங்கியது.
அதைத்தொடர்ந்து நேற்று 3 கோயில்களிலும் கம்பம் நடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடந்தது.
இதற்காக காரைவாய்க்கால் சின்ன மாரியம்மன் கோயில் வளாகத்தில் முதல்நாள் இரவில் அக்னி குண்டம் தீ பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 6.30 மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கியது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கான மக்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம்.
.ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக பூசாரிகள் மட்டுமே இறங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி மூன்று வகையறா கோவில்களை சேர்ந்த 9 பூசாரிகள் அக்னி குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சின்ன மாரியம்மன் கோயில் வளாகம் முன்பு தேர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
கொரோனா தாக்கம் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் தேரோட்டம் நடந்தது. பொன்வீதி, டவுன் காவல் நிலையம், மணிக்கூண்டு அக்ரஹார வீதி, கச்சேரி வீதி வழியாக திரும்பவும் சின்ன மாரியம்மன் கோவிலில் தேர் நிலை நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும். வரும் 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 13-ஆம் தேதி மறுபூஜை உடன் திருவிழா நிறைவடைகிறது.
கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சின்ன மாரியம்மன் கோயிலுக்கு வழிபட வந்த பக்தர்க ளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.மேலும் கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தப் படுத்தப் பட்டது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என நிர்வாகத்தினர் அறிவுறுத்தியிருந்தனர்.