logo
   அக்.1-இல் பள்ளிகளில் திறப்பு- மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அக்.1-இல் பள்ளிகளில் திறப்பு- மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

26/Sep/2020 07:40:19

சென்னை:  10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் கரோனா பேரிடர் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், அக்டோபர் 1-ஆம் தேதி 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பள்ளிகள் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும்” என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு “வழிகாட்டுதல் மட்டும் வழங்கப்படும் என்பதும், பெற்றோர் சம்மதக் கடிதம் எழுத்துபூர்வமாகப் பெற்று வந்தால்தான் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், அரசு ஆணையில் நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பதே மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு இல்லை; சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கே  என்றும், ஆன்லைன் மூலமும் சந்தேகங்களைக் கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டு ஏன் இப்படி அவசர கதியில் மாணவர்களைப் பள்ளிக்கு வரச் சொல்கிறது அரசு என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா பேரிடர் ஒருபுறம் விளையாடுகிறது என்றால்  தமிழக அரசு இன்னொரு புறம் விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆகவே 10 முதல் 12-ஆம் தேதி வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகளை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ள அ.தி.மு.க அரசு, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை மிகக் கவனமாக, முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், உறுதிசெய்ய வேண்டும். கொரோனா எண்ணிக்கை சென்னையில் மீண்டும் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டுப் பெற்றோர் பதற்றத்தில் இருக்க முடியாது. தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து விடாமல்; மாணவர்கள் ஒவ்வொருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்திடும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 


Top