09/May/2021 10:24:50
ஈரோடு, மே: ஈரோடு மாவட்டத்தில் 7.13 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வினியோகம்: பாதுகாப்பு வழிமுறைகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரிசி கார்டு வைத்துள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, 4,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தனர். இத்திட்டம் ஜூன், 3 முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், இம்மாத இறுதிக்குள் முதற்கட்ட தொகையாக, 2,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், மே10 -ஆம் தேதி முதல், 14 நாட்களுக்கு கொரோனாவுக்கான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு நேரத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் உதவிடும் வகையில், உடனடியாக, திங்கட்கிழமை முதல் கொரோனா நிவாரண நிதியாக, 2,000 ரூபாய் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு வருகிறது.
மேலும் ரேஷன் கடைக்கு வரும் மக்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு கையில் கிருமிநாசினி , சனிடைசர் தெளிக்கப்பட்டு அதன் பின்னரே பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.
முதல் இரண்டு நாட்களுக்கு கூட்டம் இருக்கும் என்பதால் அதற்கு தகுந்தார்போல் நிவாரணத் தொகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் உடன் ரேஷன் கடைகள் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் டோக்கன் மூலம் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும்.