logo
உணவே நல்ல மருந்து... ஆரஞ்சு பழம்...

உணவே நல்ல மருந்து... ஆரஞ்சு பழம்...

12/Feb/2021 07:23:33

புளிப்பு சுவை உள்ள உணவுப் பொருட்களின் வரிசையில் இருக்கும் ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின்- ஏ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.


ஆரஞ்சு பழத்தில் புளிப்பு சுவையை தவிர உப்பு இனிப்பு சுவைகளில் கசப்பு சுவையும் கலந்துள்ளது..மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். குறிப்பாக ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட வேண்டும். இப்போது அந்த ஆரஞ்சுப் பழத்தை சாப்பிடுவதால், வேறு என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.


ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம். தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதிலும் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க முடுயும். குறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிகப்படியான சர்க்கரை போட வேண்டாம். ஏனெனில் அவை பற்களை சொத்தையாக்கிவிடும்.


ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும்.ஆரஞ்சில் பொட்டாசியம் என்னும் கனிமச்சத்து நிறைந்துள்ளது. இது இதயத்தை சீராக இயக்கக்கூடிய ஒரு பொருள். மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ, அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது.


வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சுப் பழமானது, உடலில் உள்ள செல்களின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, எந்த நோயும் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.ஆய்வு ஒன்றில் ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் பொருள், உடலில் வைரஸ் நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.கரோட்டினாய்டு என்னும் பொருள் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருப்பதால், அதனை சாப்பிடும் போது, அது உடலில் வைட்டமின் ஏ சத்தானது மாறி, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்கும்.


ஹெஸ்பெரிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு, ஆரஞ்சுப் பழத்தில் நிறைந்திருப்பதால், அதனை தினமும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தமானது குறைவதோடு, அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.


ஆரஞ்சு பழத்தில் பீட்டா கரோட்டீன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும் முதுமைத் தோற்றமும் தடைபடும்.


ஆரஞ்சு பழத்தை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி, கல்லீரலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.மூட்டுகளில் வலிகளோ அல்லது வீக்கங்களோ இருந்தால், அப்போது ஆரஞ்சு ஜூஸை தினமும் குடித்து வந்தால் குணமாகும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது அதிகம் நிறைந்துள்ளது.


ஆரஞ்சு பழம் ஆண்களுக்கு மிகவும் சிறந்த பழம். ஏனெனில் அந்த பழத்தை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களானது ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், ஆரஞ்சுப் பழத்தை ஆண்கள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்தானது, விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால், வலுவான பற்களைப் பெறலாம்.உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில். நோய் வருமுன் காப்போம்..

  தொகுப்பு:-சங்கரமூர்த்தி-.73731 41119.

Top