logo
புதுகை ராணியார் அரசு மருத்துவமனையில் ரூ.25 கோடியில் மகப்பேறு, பச்சிளங்குழந்தை பராமரிப்பு ஒப்புயர்வு மையம் திறப்பு

புதுகை ராணியார் அரசு மருத்துவமனையில் ரூ.25 கோடியில் மகப்பேறு, பச்சிளங்குழந்தை பராமரிப்பு ஒப்புயர்வு மையம் திறப்பு

21/Jan/2021 01:13:54

புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டை இராணியார் மகப்பேறு மருத்துவமனையை மீண்டும் அதே இடத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்  20.01.2021 (புதன்கிழமை) துவக்கி வைத்தார்.

  மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மேலும் பேசியதாவது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முறையாக சென்னைக்கு  இணையாக மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு ஒப்புயர்வு மையம் ரூ.25 கோடி மதிப்பீட்டில்  400 படுக்கைகள் கொண்டு ஏற்கெனவே இராணியார் மகப்பேறு மருத்துவமனை இருந்த அதே இடத்தில் பொது மக்களின் வசதிக்காக தற்போது மீண்டும்   தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 126 இடங்களில் மகப்பேறு, மயக்கவியல், குழந்தைகள் நல மருத்துவர்கள் போன்ற வசதிகள் கொண்ட பிரத்யேகமான மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  இதன் பயனாக தமிழகத்தில் 100 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. இதே போன்று தமிழகத்தில் நடைபெறும் ஒட்டுமொத்த பிரசவங்களில் 62 சதவீதத்திற்கும் மேல் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. இது தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பிற்கு கிடைத்த மிகப்பொpய வெற்றியாகும். 


இந்தியாவின் பிற மாநிலங்களில் 30 சதவீதம் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சீமாங் மையங்களில் 53.32 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6,460 கர்ப்பிணிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று தமிழகத்தில் புதிதாக பிறந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 70,000 பச்சிளங் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் நல்லமுறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளனர். மகப்பேறு தாய் சேய் நலத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. குறிப்பாக பிறமாநிலங்களில் தாய் இறப்பு விகிதம் 113 ஆக உள்ளது. தமிழகத்தில் தாய் இறப்பு விகிதம் 1 லட்சத்திற்கு 60 ஆக உள்ளது. குழந்தை இறப்பு விகிதம் இந்திய அளவில் 32 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 17லிருந்து 16-ஆக குறைந்து தற்பொழுது 15-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது உலகளவிலான மகத்தான சாதனையாகும்.


தமிழகத்தில் தாய் சேய் நலத்திற்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தாய் இறப்பு விகிதம் ஏற்கெனவே 64-ஆக இருந்தது தற்பொழுது 60-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் குறைக்க நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்ததின் படி 2030-இல் அடைய வேண்டிய இலக்கை 2021-ஆம் ஆண்டிலே தமிழக சுகாதாரத்துறை எட்டியுள்ளது. 

தமிழக அரசு தற்பொழுது கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்துக்கு கூடுதலாக  5.08 லட்சம் வாக்சின்   வரப்பெற்றுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இதே போன்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து போடும் பணியும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும்.

 தமிழக அரசு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சாதனை படைத்துள்ளது. அதனடிப்படையில் இந்த இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில தேர்வு பெற்ற மருத்துவ மாணவர்கள் இன்றைய தினம் முதல் நாள் மருத்துவக் கல்லூரிக்கு சென்றுள்ளனர். இவ்வாறு இடஓதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் அனைத்து மருத்துவ மாணவர்களுக்குமான கல்விக்கட்டணம் உள்பட அனைத்து கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்றுள்ளது.

 இதற்கான அனைத்து பெருமையும் பெரும் முயற்சி எடுத்து இதனை நிறைவேற்றிய பெருமை முதல்வரையே சாரும். இதனால் எக்காலத்திலும் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவா;களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மிகப்பெரிய அங்கீகாரமாக அமைந்துள்ளது என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள்(அறந்தாங்கி) இ.ஏ.இரத்தினசபாபதி, (கந்தர்வக்கோட்டை) பா.ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் ஜெயலெட்சுமி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, மாவட்ட வர்த்தக சங்கங்கள், ஜமாத்தார்கள், வேளாண் சங்க பிரதிநிதிகள், பல்வேறு சமூக நல அமைப்பினர்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Top