logo
ஈரோடு மார்க்கமாக கோவைக்கு பயணிகள் ரெயில் இயக்க  கோரிக்கை

ஈரோடு மார்க்கமாக கோவைக்கு பயணிகள் ரெயில் இயக்க கோரிக்கை

23/Sep/2020 08:49:03

ஈரோடு:  ஈரோடு மார்க்கமாக கோவைக்கு பயணிகள் ரயில் இயக்க வேண்டுமென  ஈரோடு சீசன் டிக்கெட் ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், ஈரோடு  கணேசமூர்த்தி எம்.பி.யிடம் மனு அளித்தனர். 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எங்களது சங்கத்தில் 1,038 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் அல்லாதவர்கள் சுமார் 2000 பேர் இருக்கின்றனர். நாங்கள் அனைவரும் தினமும் வேலை, வியாபாரம் விஷயமாக ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு சென்று வருகிறோம். கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 2 மாதங்கள் வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவித்து வந்தோம். ஜூன் மாதம் முதல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், தற்போது சொந்த வாகனத்திலும், பேருந்திலும் வேலைக்கு சென்று வருகிறோம்.  பேருந்தில் திருப்பூர் செல்ல 2 மணி நேரம் கிறது. ரயிலில் (சாதாரண பாசஞ்சர்) செல்லும் போது ஒரு மணி நேரம் தான் ஆனது.  பேருந்தில்  சமூக இடைவெளி இல்லாமல் குறைந்தது 100 பயணிகள் அளவில் பயணிக்கின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.  பேருந்தில்  திருப்பூர் சென்றுவர மாதத்திற்கு ரூ.3ஆயிரம் கட்டணம் செலவாகிறது. இதுவே ரயிலில் ஈரோட்டில் இருந்து திருப்பூர் சென்றுவர மாதத்திற்கு சீசன் டிக்கெட் மூலம் ரூ.220 மட்டுமே ஆனது.  பேருந்தில்  செல்லவேண்டியுள்ளதால் எங்களுக்கு பொருளாதார இழப்பு மட்டும் அல்லாமல் கால விரயமும் ஏற்படுகிறது. எனவே, தினசரி காலை நேரத்தில் ஈரோட்டில் இருந்து திருப்பூர்-கோவை வரையும், அதேபோல். கோவையில் இருந்து ஈரோடு வரை மாலையிலும் ரயில் சேவை தொடங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரயில் சேவை நிறுத்துவதற்கு முன்பு பலர் சீசன் டிக்கெட் எடுத்து வைத்துள்ளனர்.  ரயில் சேவை நிறுத்தியதால் அந்த சீசன் டிக்கெட் காலாவதி ஆகிவிட்டது. அதனால் அந்த சீசன் டிக்கெட்டுக்கு, ரயில் சேவை தொடங்கும் போது கால நீட்டிப்பு செய்து தர ஆவண செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.


Top