logo
கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள்: ஆமதாபாத்தில் பிரதமர் நேரில் ஆய்வு

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள்: ஆமதாபாத்தில் பிரதமர் நேரில் ஆய்வு

29/Nov/2020 09:22:12

ஆமதாபாத்: கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை பிரதமர் மோடி  ஆமதாபாத்தில் பார்வையிட்டார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வது, 2 மற்றும் 3-வது கட்டங்களில் இருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி  நேரில் செல்ல திட்டமிட்டிருந்தார்.அதன்படி, நவ.28  காலை குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, சாங்கோதர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-ஆவது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட், ஐதராபாத்தில் கோவாக்சின் மருந்து தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனங்களிலும் பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Top