logo
  புதுக்கோட்டை அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை.பரணிதீபம் ஏற்றப்பட்டது

புதுக்கோட்டை அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகை.பரணிதீபம் ஏற்றப்பட்டது

29/Nov/2020 07:50:45

புதுக்கோட்டை மேல ராஜ  வீதியிலுள்ள அருள் மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்  திருக்கார்த்திகையை முன்னிட்டு  நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில்  திரளான  பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர்.

திருக்கார்த்திகையையொட்டி காலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர்,  திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்  தீபாராதனை  நடந்தது.

பின்னர், மாலையில்   தண்டாயுதபாணி சுவாமி சந்தனக்காப்பு வெள்ளி அங்கி, மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.பின்னர் மேல்தளத்தில் செல்லப்பாகுருக்கள், பாலுகுருக்கள் ஆகியோர் தலைமையில்     கார்த்திகை பரணி  தீபம்  ஏற்றப்பட்டது   இதில்,    திரளான  பக்தர்கள் வருகைதந்து   வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

கார்த்திகை தீப திருவிழா நேரத்தில் விளக்கேற்றுவதன் மகிமைகள்  பற்றி பாலு சாஸ்திரிகள் கூறியதாவது:

 விளக்கேற்றும் வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். விளக்கு வைப்பதற்கு முன்பாக பெண்கள் தலைவாரி, தங்களை அழகு செய்து கொண்டு விளக்கேற்ற வேண்டும்.திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.

 இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார்.நம் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

தினத்தன்று,  களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கு ஏற்ற திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். 

வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும்.எண்ணெயின் மகிமை. நெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும். இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்ற சகல காரிய வெற்றி கிடைக்கும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் அதிகரிக்கும்.

விளக்கு ஏற்றி மறந்து விட்டால் அது தானாக கருகி அணைந்து விடும். விளக்கு ஏற்றிய பின்பு அது தானாக அணையக்கூடாது. கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் குளிர்விக்க வேண்டும் அப்போதுதான் விளக்கு ஏற்றியதன் பலன் கிடைக்கும் என்றும் கூறினார். 


Top