24/May/2020 12:08:54
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாலையில் வேகத்தடையை அகற்றியது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 9 பேர் மீது சனிக்கிழமை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலங்குடி அருகேயுள்ள கண்ணியான்கொல்லையில் சாலையில் இருந்த வேகத்தடையால் இடையூறு ஏற்படுவதாக வானக்கண்காட்டைச் சேர்ந்த சிலர் அந்த வேகத்தடையை உடைத்ததாக கூறப்படுகிறது. அதை, கண்ணியான்கொல்லை பகுதி மக்கள் தடுத்துள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அதில்,கண்ணியான்கொல்லையைச் சேர்ந்த திருச்செல்வம், திருமுருகன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து, இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக வடகாடு போலீஸார், வாணக்கன்காட்டைச் சேர்ந்த கார்த்திக், முருகன், விஜி, வீரையா, பாலன் உள்ளிட்ட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த திருச்செல்வம், திருமுருகன், ரமேஷ், பழனி ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.