23/May/2020 12:40:23
புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக் கிளையில் நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த வங்கி கிளை மூடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் 8 பேர், மாலத்தீவில் இருந்து வந்த ஒருவர், சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள 5 பேர் என மொத்தம் 15 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியன் வங்கி கிளைக்கு சீல் வைத்தார். இதனைத்தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் வங்கி உள்ளிட்ட அந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.