22/May/2020 01:13:45
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்திய 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நம்புதாளையை அடுத்த வீரசங்கலிமடம் பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில், திருவாடானை
காவல் துணைக்கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர்கள் இருவருக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, காவல் துணைக்கண்காணிப்பாளர் புகழேந்திகணேஷ் தலைமையிலான 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டனர்.
அப்போது,ராமநாதபுரம்- சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியான ஆர்.எஸ்.மங்கலம் அருகே ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள், 36 செம்மரக்கட்டைகள், தங்க கட்டிகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதை கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சோளியக்குடி பகுதியைச் சேர்ந்த தாவூத் மகன் அப்துல் வஹாப்(36), வீரசங்கலிமடம் பகுதியை சேர்ந்த அப்துல் மஜீத் மகன் அஜ்மீர் கான்(42), தொண்டி பகுதியை சேர்ந்த ஜமால்முகம்மது மகன் அபுல்கலாம் ஆஷாத்(23), கருமொழி பகுதியை சேர்ந்த ராஜாங்கம் மகன் முத்துராஜா (38), சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமம் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஹபீப் மகன் அப்துல் ரஹீம்(49), அதே பகுதியை சேர்ந்த அப்துல்சலாம் மகன் அஜ்மல்கான்(47), சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சூராணம் பகுதியை சேர்ந்த ஞானபாக்கியம் மகன் அருள்தாஸ்(43), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பெரியகாரை பகுதியை சேர்ந்த சிவலிங்கம் மகன் சுரேஷ்குமார்(44), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கேசவன்(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து எஸ்.பி. வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும்,சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளவர்கள். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டது.இதை கடல் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்றுள்ளனர். தனிப்படை போலீசார் சிறப்பாக செயல்பட்டு அவர்களை கைது செய்துள்ளனர் என்றார்.