logo
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியாக பொதுமக்கள் கொண்டாட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியாக பொதுமக்கள் கொண்டாட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

13/Nov/2020 05:48:41

புதுக்கோட்டை:  பொதுமக்கள் தீபாவளியை விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியாக கொண்டாட வேண்டும் என்பது தொடர்பாக   மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கை :

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும்.  இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன. 

 பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய் வாய்பட்டுள்ளவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்

. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி  தொடரப்பட்ட பொதுநல வழக்கில்  உச்ச நீதிமன்றம் தனது 23.10.2020 ஆம் தேதி  வெளியிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த 2018 மற்றும் 2019 -ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கு பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை  வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சித்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் தொடச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்.

 மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வெண்டும். ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். 

Top