logo
பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? - கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு

பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? - கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு

04/Nov/2020 08:35:35

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்தநிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகளில் வரும் 16-ஆம் தேதி முதல் 9,10,11,12-ஆம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார். அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் வருகிற நவம்பர் 9-ந் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 9 , 12 -ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நவ-9 -ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க இயலாதோர் கடிதம் வாயிலாக கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Top