20/Feb/2021 11:05:39
புதுக்கோட்டை, பிப்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மௌன ஊர்வலம் நடத்தப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் வி.முருகேசன் மற்றும் ராமசுப்புராம் தலைமையில் மௌன ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் காந்தி பூங்கா அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் எம்ஜிஆர் சிலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைந்தது. அங்கு உயிர் நீத்த விவசாயிகள் உருவப் படத்திற்கு காங்கிரஸார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், திருச்சி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.