logo
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் அனைத்து குளங்களிலும் நீர் நிரப்பப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தில் அனைத்து குளங்களிலும் நீர் நிரப்பப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

31/Oct/2020 10:49:47

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், ராப்பூசலில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில்  (31.10.2020)  ராப்பூசலில் இன்று நடைபெற்ற  நிகழ்வில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

பின்னர், அமைச்சர் மேலும் கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில்  ராப்பூசல் கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் மாவட்டத்தில் இதுவரை 39 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இதன் பயனாக விவசாயிகள் இடைதரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,50,000 மெட்ரிக்.டன் நெல் கொள்முதல் செய்யமுடியும்  என எதிர்பார்க்கப்பட்டு, அதற்கு தேவையான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நடப்பு பருவத்தில் 1.10.2020 முதல் 30.10.2020 வரை விவசாயிகளிடமிருந்து 15,427 மெட்ரிக்.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், 2,198 விவசாயிகளுக்கு ரூ.24.35 கோடி பணம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதே போல் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான இடங்களில் ஆய்வு செய்து, புதிய  நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதுடன், அத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக ரூ.700 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  வருகிற ஜனவரி மாதம் அடிக்கல் நாட்ட உள்ளார்.  இத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நீர் நிரப்ப வழிவகை ஏற்படும். 

இதன் பயனாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழித்து விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும். மேலும் இப்பகுதி பொது மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அரசின் நலத்திட்டங்களை பொது மக்கள் பெற்று பயன்பெறவேண்டும் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதில்,  வருவாய் கோட்டாட்சியர் (பொ) முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்  மோகன், அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் வீ.ராமசாமி உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Top