28/Apr/2020 11:18:23
புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி அருகே விவசாயிடம் கொரோனா நிவாரண நிதி வழங்குவதாகக் கூறி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.18,500 ரொக்கத்தை நூதன முறையில் மர்ம நபர் மோசடி செய்துள்ளார்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழ புலவன்காட்டைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு விவசாயி. இவரது செல்லிடப்பேசிக்கு திங்கள்கிழமை இரவு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியதோடு, கொரோனா நிதி வந்திருப்பதாக கூறியுள்ளார். அந்த தொகையை தங்களுக்கு அனுப்புவதற்காக வங்கி கணக்கு, ஏடிஎம் அட்டை எண் ஆகியவற்றை கேட்டுள்ளார். இதை நம்பிய அவர், அந்த மர்ம நபரிடம் வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.18,500 ரொக்கம் எடுக்கப்பட்டு இருப்பதாக வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லக்கண்ணு அந்த அந்த மர்ம நபரை தொடர்பு கொண்டபோது செல்லிடப்பேசி அணைக்கப்பட்டு இருந்துள்ளது.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செல்லக்கண்ணு அளித்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.