17/Oct/2020 01:22:11
புதுக்கோட்டை: அதிமுக வின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று கோலாகலமாக கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்ட, நகர அதிமுக சார்பில் இன்று 17.10.2020.காலை 11 மணியளவில் கழக அமைப்பு செயலாளரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் தமிழக வீட்டு வசதி வாரியத் தலைவர் வைரமுத்து, எம்எல்ஏக்கள்- பா. ஆறுமுகம், ரெத்தினசபாபதி, நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகில் உள்ள ஜல்லிக்கட்டு காளை சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் உருச்சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்.
2021 -ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னோட்டமாக அக்கட்சியினர் உற்சாகமாக இந்த பேரணி மற்றும் மாலை அணிவித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது
மேலும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் 2021 -ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்று முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனர். இந்த ஊர்வலத்தில் வந்தவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.
மாலை அணிவித்தல் பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 2021 -ஆம் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் தேர்தலுக்குப் பிறகு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தான் இருப்பார் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் தான் இருப்பார். திமுகவை அரியணையில் ஏற விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.