15/Oct/2020 01:19:25
சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை காலமானார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரான வெற்றிவேல் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார் அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், வெற்றிவேலின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், நுரையீரலில் தொற்று அதிகரித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. எனினும்
சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை மாலை காலமானார். அவரது மறைவிற்கு அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.