29/Aug/2021 03:04:25
ஈரோடு, ஆக: ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 100 சத்துணவு மையங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் 9-ஆம்வகுப்பு முதல் பிளஸ்- 2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதையொட்டி சத்துணவு மையங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து மாணவ- மாணவிகளுக்கு உணவு வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சத்துணவு மைய சமையலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) அமுதா, சத்துணவு அமைப்பாளர்களிடம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பசீர் அகமது கூறியதாவது:ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்கும் 100 சத்துணவு மையங்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்கப்பட்டுள்ளது. உணவு சமைக்கும் போது தலை முடி உணவில் விழாமல் இருக்க ஹேட்ஸ்கார்ப், சமையல் உடை, கை துடைக்க தலா 5 டவல், கை கழுவ தலா 5 சோப், மாணவ- மாணவிகள் நகம் வெட்டும் கருவி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்