27/Aug/2021 10:39:23
புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள லாரி மார்க்கெட்டில் லாரி ஓட்டுநர்களுக்கு சாலை விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் லாரி மார்கெட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ஆர்.எம். துரைமணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெ .ஜெரீனாபேகம் பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடுகளை அனைவருக்கும் வழங்கி சிறப்புரையாற்றினார் .
போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி பேசியதாவது: ஓட்டுனர்கள் மிகவும் கவனமாக லாரிகளை இயக்க வேண்டும். அனைவரும் தற்போது உள்ள காலகட்டத்தில் முக கவசம் அணிந்து மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும். சாலைகளில் முறையான விதிமுறைகளை பின்பற்றி, லாரிகளை இயக்க வேண்டும். லாரி ஓட்டுநர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தன்னிடம் தெரிவிக்கலாம்.
புதுக்கோட்டை நகர பகுதியில் விபத்து இல்லாத பயணத்தை லாரி ஓட்டுனர்கள் மேற்கொள்ள வேண்டும் அதிக போக்கு வரத்து உள்ள சாலைகளில் செல்லாமல், உங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாக நகர பகுதிகளுக்குள் வரவேண்டும் என்றார் அவர். இதையடுத்து, கண்ணப்பநாயனார் கண்தானக்கழகத்தலைவர் தலைவர் கோவிந்தராஜன் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஜான்சிராணி ரெட்கிராஸ் புகழேந்தி செல்வா, லாரி உரிமையாளர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், ஓட்டுனர்கள் மெக்கானிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.