logo
தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்- அமைச்சர் காமராஜ் உத்தரவு

தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்- அமைச்சர் காமராஜ் உத்தரவு

03/Oct/2020 05:38:58

தேவையான இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார்.

 இது குறித்து, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வெளியிட்ட அறிக்கை, தமிழக முதல்வர் பழனிசாமியின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் கடந்த கொள்முதல் பருவமான 2019-2020ல், 2135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 32.41 லட்சம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6,130 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 5,85,241 விவசாய பெருமக்கள் பயனடைந்துள்ளனர். இந்த கொள்முதல் அளவானது தமிழ்நாடு வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச கொள்முதல் சாதனையாகும்.

 தற்போது, 1.10.2020 அன்று துவங்கியுள்ள 2020-2021 கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1888/- மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1868/- ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. இத்துடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.70/- மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.50/- வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு ரூ.1958/- மற்றும் சாதாரண ரகத்திற்கு ரூ.1918/- வழங்கப்படும்.

மேற்கண்டவாறு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையங்களில் உள்ள மின்னனு இயந்திரங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு கொள்முதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கொள்முதல் பணி 1.10.2020 முதல் துவங்கப்பட்டுள்ளது. 2.10.2020 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விடுமுறை நாளாகும். எனவே, இன்று (3.10.2020) அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளின் நெல்லினை, உயர்த்தப்பட்ட விலையில் கொள்முதல் நடைபெற்று வருகிறது. மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லினை உடனடியாக கொள்முதல் செய்யும் பொருட்டு 4.10.2020 ஞாயிற்றுகிழமை அன்றும் அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை, 591 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

 தற்போது, சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லானது அறுவடை இயந்திரம் மூலம் விவசாயிகளால் ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் கொண்டுவரப்படும் நெல்லினை பாதுகாப்பாக வைப்பதற்கு பாலிதீன் தார்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன.

 ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக 1000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ய இயலும் என்பதாலும், அதனால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் அதிக அளவில் நிலுவையில் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதாலும், விவசாயிகளிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் அறுவடை செய்த தங்களது நெல்லினை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உயர்த்தப்பட்ட அதிக விலையில் விற்பனை செய்து பயனடையலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Top