06/Jul/2021 07:09:41
புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை நகரின் பிரதான சாலையில் போக்குவரத்தை சீரமைக்க கோரி நகர காவல்துணை கண்காணிப்பாளரிடம் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தினர் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை நகரத்துக்கு அழகு சேர்க்கும் சாலைகளில் முக்கியமான சாலை தெற்கு நான்காம் வீதி சாலையாகும். இந்தச்சாலை, கிழக்கே ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் தொடர் சாலையாகவும் மேற்கே பொதுப்பணித்துறை அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாவட்ட சிறைச்சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பல முக்கியமான மருத்துவமனைகள், வங்கிகள் ஆகியவை அமைந்துள்ள பிரதான சாலையாகவும் திகழ்கிறது.
இந்த சாலை ஒருவழி சாலையாக தற்போது உள்ளதே போக்குவரத்துக்கு மிக நல்லதாகும். ஆனால் நான்கு சக்கர வாகனங்கள் இருபுறமும் ஒழுங்கில்லாமல் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.
மேலும் இருசக்கர வாகனங்களை நேர்த்தியாக நிறுத்துவதற்கு கட்டுப்பாடுகளையும் சாலைகளில் உள்ள உணவகங்களில் இருந்துவெளியேறும் எண்ணெய் மிளகாய்த் தூவல்களால் ஏற்படும் கண்ணெரிச்சல் வராமல் தடுக்க ஏதுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி மோகன்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் நகரகாவல்துணை கண்காணிப்பாளர் லில்லிகிரேசியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துணை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில், துணைத் தலைவர் ஏ.இப்ராஹிம்பாபு, பொருளாளர் சி.பிரசாத், துணைச் செயலாளர்ராஜாமுஹம்மது பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுஹம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.