logo
எஸ்.பி.வேலுமணி அரசியலை விட்டுச் சென்றாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவேன் - மு.க.ஸ்டாலின் உறுதி

எஸ்.பி.வேலுமணி அரசியலை விட்டுச் சென்றாலும் சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவேன் - மு.க.ஸ்டாலின் உறுதி

02/Jan/2021 10:30:17

கோவை: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசியலை விட்டுச் சென்றாலும் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் திமுக சார்பில் இன்று மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே பேசியதாவது:

வரும் 10-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில், அதிமுகஅரசின் ஊழல்களை எடுத்துச் சொல்லி வருகிறோம். கோவை மாவட்டத்தில் தி.மு.க கூட்டங்களை தொடர்ந்து தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதி மறுத்து திமுக-வினர் பலரை கைது செய்துள்ளனர். என்ன வழக்கு போட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் திமுகவினர்.

அதிமுக ஆட்சியில் கிராமசபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, திமுக அந்தக் கூட்டங்களை நடத்தியது. அதன்பிறகு, 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. உள்ளாட்சித் தேர்தலிலும் அது எதிரொலித்தது. இந்த ஆட்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் செய்த ஊழல்களை ஆதாரத்தோடு ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்.

அந்தப் புகாரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொய்யான குற்றச்சாட்டு என கூறுகிறார். தன்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் ஸ்டாலின் அரசியலில் இருந்து விலக தயாரா என்று கேட்கிறார். நான் தயார், நீங்கள் தயாரா. நீங்கள் அரசியலை விட்டுச் சென்றாலும் நாங்கள் சட்டத்தின் முன்பாக நிற்க வைத்து தண்டனை பெற்றுத் தருவோம்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரது இறப்பில் மர்மம் நீடிக்கிறது. மர்ம மரணம் என்று நான் கூறவில்லை. இப்போது துணை முதல்வராக இருக்கம் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார்.

இது தொடர்பாக, 3 ஆண்டுகளாக விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. 10 முறை ஆணையத்தின் காலத்தை நீட்டிப்பு செய்துள்ளனர். சாட்சி சொல்ல 8 முறை அழைத்தும் ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை கண்டுபிடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்றார்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Top