01/Jul/2021 12:56:34
ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலியானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, புலிகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள் என ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் திம்பம் அடுத்த அரேபாளையம் செல்லும் வழியில் உள்ள ஒரு சாலையில் புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் 4 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தலமலை வனச்சரகர் மற்றும் வன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மருத்துவக் குழுவும் வரவழைக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் அந்த சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.