logo
ஈரோடு ரயில் நிலையத்தில் புதுப்பொலிவுடன் காணப்படும் முன்பதிவு மையங்கள்: மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு ரயில் நிலையத்தில் புதுப்பொலிவுடன் காணப்படும் முன்பதிவு மையங்கள்: மக்கள் மகிழ்ச்சி

22/Feb/2021 09:51:55

ஈரோடு, பிப்: ஈரோடு ரயில் நிலையத்தில் மேம்பாட்டுபணிகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக ரயில் நிலையத்தின் டிக்கெட் முன்பதிவு மையங்கல் புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் காட்சியளிக்கின்றன.

 ஈரோடு ரயில் நிலையம் வழியாக தினமும் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக வட நாட்டில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள். இதனால் ஈரோடு ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும். 

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் தொற்று தாக்கம் குறைந்ததால் சில மாதங்களுக்குப் பிறகு சிறப்பு  ரயில்கள் என்ற பெயரில் படிப்படியாக ரயில் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. தற்போது வரை முன்பதிவு செய்யும் பயணிகள் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். மிக விரைவில் அனைத்து வகையான ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஈரோடு ரயில் நிலையத்தில் செயல்பட்டு வந்த முன்பதிவு மையங்கள் மூடப்பட்டு முன்புறம் உள்ள தகவல் தெரிவிக்கும் பகுதியில் டிக்கெட் முன்பதிவு மையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. அதே நேரத்தில் பழைய முன்பதிவு மையம் செயல்பட்ட பகுதி புதுப்பிக்கப்பட்டு வந்தது.

இந்த பணிகள்  கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து மீண்டும் புதுப்பொலிவுடன் முன்பதிவு மையங்கள் செயல்பட தொடங்கியுள்ளது.முன்பதிவு செய்ய வரும் பயணிகள் நிற்பதை தவிர்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த  டூவீலர் ஸ்டாண்ட், கார் பார்க்கிங் போன்ற பகுதிகள் வரும் 24 -ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு பேனரும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது. தற்போது ரெயில் நிலையத்தில் தரைத் தளம் அமைத்தல் , புதுமைப்படுத்துதல், சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Top